ஆப்நகரம்

தேர்தல் சாணக்கியனை ஒப்பந்தம் செய்த மம்தா; மேற்கு வங்க வெற்றிக்கு பாடம் ஆரம்பம்!

ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு உதவிய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை, மம்தா பானர்ஜி ஒப்பந்தம் செய்துள்ளார்.

Samayam Tamil 6 Jun 2019, 7:06 pm
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆச்சரியப்படும் வகையில் 18 தொகுதிகளில் வெற்றிகளை குவித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் தனது அடித்தளத்தை பாஜக வலுவாக பதிவு செய்துள்ளது.
Samayam Tamil Mamata Prasanth


மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் 22 தொகுதிகளில் மட்டுமே திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேர்தல் வித்தகரும், வெற்றிக்கான ஆலோசகருமான பிரசாந்த் கிஷோரை மம்தா இன்று சந்தித்துள்ளார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஆவார்.

அந்த மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளில் 150 தொகுதிகளையும், மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. முதல் முறையாக ஆந்திராவின் ஆட்சிக் கட்டிலில் ஜெகன் மோகன் அமர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு பீகாரில் ஆட்சி நடத்தி வரும் ஒருங்கிணைந்த ஜனதா தள் கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து அம்மாநிலத்தின் இளைஞர்கள் மத்தியில் கட்சியை கொண்டு சென்றதில் மிகவும் முக்கிய பங்காற்றினார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு பிறகு, ஏராளமான கட்சிகள் தன்னை தொடர்பு கொண்டு பேசி வருவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இவர் 2014ல் மோடியின் வெற்றிக்கும், 2015ல் நிதிஷ் குமாரின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர்.

அடுத்த செய்தி