ஆப்நகரம்

மாறன் சகோதர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு: இன்று மதியம் தீர்ப்பு

மாறன் சகோதர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இன்று மதியம் 2.30 மணிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Samayam Tamil 14 Mar 2018, 12:20 pm
சென்னை: மாறன் சகோதர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இன்று மதியம் 2.30 மணிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
Samayam Tamil maran brothers to face judgment on illegal telephone exchange case today
மாறன் சகோதர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு: இன்று மதியம் தீர்ப்பு


2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, தன் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனமான சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இந்த இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், 2007ஆம் ஆண்டு சென்னை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், முன்னாள் துணை பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, சன் தொலைக்காட்சி தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இந்த 7 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2004 முதல் 2007 ஆம் ஆண்டு கால கட்டம் வரை மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சட்டவிரோதமான தொலைப்பேசி இணைப்புகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு ரூ.1.76 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. கடந்த வாரம் இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி நடராஜன் இதற்கான தீர்ப்பு மார்ச் 14ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி, இன்று மதியம் 2.30 மணிக்கு மாறன் சகோதர்கள் உள்ளிட்டவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பது குறித்த முக்கியத் தீர்ப்பை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்க உள்ளது.

அடுத்த செய்தி