ஆப்நகரம்

மரத்தில் தஞ்சமடைந்த சென்னை தொழிலாளர்கள்!

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்கு இடமின்றி மரத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 28 Mar 2020, 10:52 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். பல தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளித்துள்ளன. பல நிறுவனங்கள் ஊழியர்கள் தங்களது வீட்டிலேயே இருந்தபடி வேலைபார்க்க அனுமதித்துள்ளன.
Samayam Tamil மரத்தில் தஞ்சமடைந்த சென்னை தொழிலாளர்கள்


மறுபுறம், புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பீதியால் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இன்று (மார்ச் 28) டெல்லி ஆனந்த விஹார் பேருந்து நிலையத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக பெருந்திரளாக கூட்டம் கூடினர். இப்படி கூட்டம் கூடுவதால் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் சமூகத்தில் பரவ வாய்ப்புள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நிவாரண முகாம்களை அமைத்து, உணவு, மருத்துவ வசதிகளை வழங்கும்படியும், நோய் அறிகுறிகள் கொண்ட தொழிலாளர்களை தனிமைப்படுத்த வழிவகை செய்யும்படியும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க மாநில பேரிடர் மீட்பு நிவாரணத் தொகையை பயன்படுத்தும்படி அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பலராம்பூர் பகுதியிலுள்ள வங்கிடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களை ஒரு மரத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கு தனி அறைகள் இல்லாத காரணத்தால் மரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுள்ளனர். இம்மரங்கள் பொதுவாக அப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதுகுறித்து புருலியா மாவட்ட ஆட்சியர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “வெளிமாநிலங்களிலிருந்து வந்தாலும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அவர்களிடம் இல்லை. வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் தற்போது வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் மரங்களில் தங்கக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி