ஆப்நகரம்

மிசோரமில் முதல்வராக பதவியேற்ற மிசோ தேசிய முன்னணி கட்சி தலைவர் சொரம்தாங்கா!

மிசோரம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர் சொரம்தாங்கா முதல்வராக பதவியேற்றுள்ளார்.

Samayam Tamil 15 Dec 2018, 12:30 pm
மிசோரம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர் சொரம்தாங்கா முதல்வராக பதவியேற்றுள்ளார்.
Samayam Tamil mizoram


கடந்த 2008ம் ஆண்டு முதல் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் நவம்பர் 28ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடந்தது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 இடங்களிலும், சுயேட்சைகள் 8 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியைத் தொடந்து மிசோரம் மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்த சொரம்தாங்கா 3ஆவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவின் போது ஆளுநர் ராஜசேகரன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சொரம்தாங்கா கூறுகையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல், எங்களது கட்சி மட்டும் ஆட்சியமைக்கவுள்ளது. ஏனென்றால், 40 தொகுதிகளில் 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கிறோம். ஆனால், நாங்கள் காங்கிரஸ் அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் சேர விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், எனது தலைமையிலான அரசு உருவாக உள்ளது. அப்போது, எனது முக்கிய அங்கமாக இருப்பது, மதுவிற்கு தடை, சாலைகள் பழுதுபார்த்தல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது தான் எனது முக்கிய நோக்கமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி