ஆப்நகரம்

கொரோனாவை ஓரங்கட்டிய பருவமழை - இத்தனை மாநிலங்களை புரட்டி போட்டதால் கவலை!

பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெரிய அளவில் மக்களை பாதித்துள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

Samayam Tamil 22 Jul 2020, 9:59 am
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 மாநிலங்களில் புரட்டி போட்ட பெருமழையால் 470 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் மேற்கு வங்கம், அசாம், குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிகபட்ச பலி எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. நடப்பாண்டின் மார்ச் மாதத்திற்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய பேரிடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ள பாதிப்பின் மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த 70 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Monsoon 2020 in India


தற்போதைய பருவமழை சீசனில் அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 142 பேர் பலியாகியுள்ளனர். 5 பேரைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து அசாமில் 111, குஜராத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தவிர மகாராஷ்டிராவில் 46, மத்தியப் பிரதேசத்தில் 44 பேர் பலியாகி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளிகளை திறக்க முடிவு, அதுவும் இந்த தேதியில் இருந்து - மாநில அரசு அதிரடி!

கேரளா மற்றும் மகாராஷ்டிராவின் 13 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி 800 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. கொரோனா பாதிப்பு பரவிக் கொண்டிருக்கும் சூழலில் முகாம்களில் போதிய சரீர இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அசாமில் 1.45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 564 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்கத்தில் 118, உத்தரப் பிரதேசத்தில் 78 முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் 12,000 பேர் மீட்கப்பட்டு 13 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டும் பருவமழை சீசனில் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 1,685 உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போன சம்பவங்களும் அரங்கேறின.

ஆறுதலான செய்தி: நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் சரிவு!

2019ஆம் ஆண்டு பருவமழையானது 25 ஆண்டுகளில் இல்லாத பெருமழை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 22 லட்சம் பேர் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதையொட்டி 8,700 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன. பருவநிலை மாறுபாட்டின் காரணமாக ஆண்டுதோறும் 26 மில்லியன் மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் ஆபத்து குறைப்பிற்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி