ஆப்நகரம்

லாக் டவுனில் இப்படியொரு நெகிழ்ச்சி; ஓடி வந்த கைகொடுத்த முஸ்லீம்கள்- எதற்கு தெரியுமா?

உயிரிழந்த இந்து நண்பரின் உடலை சுமந்து செல்ல முஸ்லீம் நண்பர்கள் கைகொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 12:35 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள புலந்த்ஷஹரைச் சேர்ந்தவர் ரவி சங்கர். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். நாடு முழுவதும் லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரவியின் உடலை எப்படி எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்வது என்று அவரது உறவினர்கள் தயக்கம் காட்டினர்.
Samayam Tamil கைகொடுத்த முஸ்லீம்கள்


இதனால் அவரின் மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார். இந்த சூழலில் அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் ரவியின் குடும்பத்தை அணுகியுள்ளனர். நாங்கள் ரவியின் உடலை சுமந்து செல்கிறோம் என்று முன்வந்துள்ளனர். அவர்கள் வேறு யாருமல்ல. அதே பகுதியை சேர்ந்த முஸ்லீம் நண்பர்கள் தான்.

அவர்கள் தங்கள் வழக்கப்படி தலையில் வெள்ளை நிற தொப்பி அணிந்தபடியே உடலை சுமந்து சென்றுள்ளார். அப்போது ”ராம் நாம் சத்யா ஹை” என்று முழக்கம் எழுப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இந்தியாவில் எங்கெல்லாம் கொரோனா ஆபத்து அதிகம்? களமிறங்கிய மத்திய அரசு!

இதைக் கண்ட பலர் முஸ்லீம் நண்பர்களின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரவி சங்கரின் இறுதிச் சடங்கு இந்து முறைப்படி நடந்துள்ளது. இதுபற்றி அந்த ஊரைச் சேர்ந்த முகமது ஜுபைத் என்பவர் கூறுகையில், உள்ளூர் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கைகொடுத்துள்ளனர்.

இந்து, முஸ்லீம் ஆகிய இரு சமூகத்தினரும் உரிய நேரத்தில் உதவி செய்யும் பண்புடையவர்களாக இருப்பதாக பெருமைப்பட்டுக் கொண்டார். மற்றொரு நபர் கூறுகையில், மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர்.

அதுவும் இறப்பில் பங்கேற்பது பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றனர். இதுபோன்ற அதிக மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் பங்கேற்காமல் தவிர்க்கின்றனர். இருப்பினும் இந்த இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி