ஆப்நகரம்

கேரள தங்கக் கடத்தலில் ஒளிந்திருக்கும் மர்மம்; என்.ஐ.ஏ அறிக்கையில் அம்பலம்!

சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் தங்கக் கடத்தல் பின்னணி குறித்து அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 22 Jul 2020, 3:06 pm
கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சம்பவம் தங்கக் கடத்தல் விவகாரமும், அதனைத் தொடர்ந்து ஸ்வப்னாவிடம் நடைபெறும் விசாரணையும் தான். இந்த வழக்கை கையிலெடுத்துள்ள என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோருக்கான காவலை நீட்டிக்க என்.ஐ.ஏ நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழலில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை என்.ஐ.ஏ தாக்கல் செய்தது. அதில், ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து மிகப்பெரிய அளவிலான தங்கத்தை கடத்தி வந்து இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் மோசடி செய்துள்ளனர்.
Samayam Tamil Kerala Gold Smuggling


இந்த விஷயத்தில் கே.டி.ரமீஸ் என்பவர் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். ஸ்வப்னா சுரேஷ்(குற்றவாளி-2), சந்தீப் நாயர்(குற்றவாளி-4) ஆகியோர் கூட்டாகவும், தனித்தனியாகவும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் குற்றச் செயல்களைச் செய்துள்ளனர். அதாவது இந்தியாவின் பண ஸ்திரத்தன்மையை சேதப்படுத்தி பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்மூலம் கிடைக்கும் வருவாயை பயங்கரவாத செயல்களுக்கு அளித்து வந்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரில் முறைகேடான வர்த்தகத்தை செய்தது இருநாட்டு நல்லுறவில் மிகவும் தீவிரமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இந்த விவகாரத்தில் மேலும் சிலரை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

ஸ்வப்னா மற்றும் சந்தீப்பை காவலில் எடுத்து விசாரித்ததன் மூலம் கடத்தலுக்கு மூளையாக ரமீஸ் என்பவர் இருந்தது தெரியவந்துள்ளது. சந்தீப் நாயர் அளித்த வாக்குமூலத்தின் படி, ஊரடங்கால் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில் அதிகப்படியான தங்கத்தை கடத்தலாம் என்று ரமீஸ் தான் திட்டம் தீட்டியது கண்டறியப்பட்டுள்ளது.

அனைவருக்கும் ரமீஸ் தான் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வந்துள்ளார். ரமீஸுக்கு பின்னால் மிகப்பெரிய குழுவே இயங்கி வந்துள்ளது. இவருக்கு சர்வதேச அளவில் தொடர்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வப்னா மற்றும் சந்தீப்பை காவலை வரும் 24ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி