ஆப்நகரம்

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணையில் ஸ்வப்னா குறித்து திடுக்கிடும் தகவகள்!

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தொடர்பான பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 13 Jul 2020, 3:48 pm
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரகத்துக்கு முகவரிக்கு செல்வதாக இருந்த 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
Samayam Tamil ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்


அதன் மீதான விசாரணையில், கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை தவறாக பயன்படுத்தி, தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் இதில் சிக்கியுள்ளதால் இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் புயலை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஸ்வப்னா, சந்தீப் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (உபா) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் பணக்கார கோயில் உரிமை... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் ஆகியோர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து கொச்சி அழைத்து வரப்பட்ட அவர்களிடம் பல மணிநேரம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவர்கள் இருவரும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் தொடர்பான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 12ஆம் வகுப்பு படித்த ஸ்வப்னா போலி சான்றிதழ் பயன்படுத்தி அரசு துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளதும், பி.காம் சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்து பணியில் சேர்ந்ததும் அம்பலமாகியுள்ளது. இதனிடையே, ஸ்வப்னாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தின் அனுமதியை நாடியுள்ளனர். அதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.

அடுத்த செய்தி