ஆப்நகரம்

அடி தடி, வெட்டு குத்தாக மாறிய ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ - கேரளாவில் விபரீதம்!

கொச்சின்: நில்லு நில்லு சேலஞ்ச் தற்போது மோதலில் முடியத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 4 Dec 2018, 6:37 pm
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் ”சேலஞ்ச்” என்ற பெயரில் புதிய, புதிய பிரச்சனைகள் உண்டாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ’கிகி சேலஞ்ச்’ வைரலானது. அதாவது ஓடும் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடிய படியே முன்னேற வேண்டும்.
Samayam Tamil Nillu NIllu


இதனால் விபத்து ஏற்படும் என்று கூறி, யாரும் இதுபோன்று செய்ய வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில் தற்போது ’நில்லு நில்லு சேலஞ்ச்’ கேரளாவில் வைரலாகியுள்ளது.

இதற்காக 2004ல் ‘ரெயின் ரெயின் கம் அகைன்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘நில்லு நில்லு’ என்ற பாடலை எடுத்துள்ளனர். இதனை ஜெசி கிஃப்ட் பாடியுள்ளார். இந்த சேலஞ்சின் படி, சாலையில் வரும் வாகனங்களை வழிமறித்து 4 அல்லது 5 பேர் கொண்ட கும்பல் ’நில்லு நில்லு’ பாடலுக்கு நடனமாட வேண்டும்.

அப்போது கையில் இலைகளை வைத்துக் கொண்டும், இல்லையெனில் ஹெல்மெட் அணிந்தும் நடனமாடுகின்றனர். இதனை டிக் டாக் ஆப்பில் பதிவிடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவ்வாறு ’நில்லு, நில்லு’ சேலஞ்சில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் பிரேக் பிடிக்காவிட்டால் பெரும் ஆபத்து நேர்ந்து விடும் என்று எச்சரிக்கின்றனர். இந்த சூழலில் மலப்புரம் மாவட்டம் திரூர் என்ற இடத்தில் சில மாணவர்கள் ’நில்லு நில்லு’ சேலஞ்சில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது உள்ளூர்காரர்கள் சிலர், மாணவர்கள் உடன் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் தப்பியோடி விட்டனர்.

பின்னர் ஆட்களை அழைத்து வந்து, அப்பகுதியில் இருந்த நபர்கள் மற்றும் கடைகளை மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி