ஆப்நகரம்

சச்சின் பைலட் எம்எல்ஏ பதவி... ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருக்கு எதிராக, சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 17 Jul 2020, 5:38 pm
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி ஆகியவை பறிக்கப்பட்டன.
Samayam Tamil pilot


அத்துடன் அவரும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்களின் எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொறடா, ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.

இதுகுறித்த வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 17) உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு சபாநாயகர் நேற்று முன்தினம் (ஜூலை 15) நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

சச்சின் பைலட்டின் எம்எல்ஏ பதவி தப்புமா? -நாளை தெரிந்துவிடும்!!

சபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக, சச்சின் பைலட் தரப்பில் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிகு முக்கியமான இந்த வழக்கு இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சபாநாயகர் தரப்பில் ஆஜரான காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சச்சி்ன் பைலட்டின் வழக்கறிஞர் என இருதரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருக்கு எதிராக சபாநாயகர் வரும் செவ்வாய்க்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த வழக்கு திங்கள்கிழமை (ஜூலை 20) மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவையடுத்து, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களின் பதவி தற்காலிமாக தப்பியுள்ளது.

அடுத்த செய்தி