ஆப்நகரம்

ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமா? அப்படி எதுவுமே இல்லை - மத்திய அரசு பகீர்!

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் தெரிவித்த பதிலை இங்கே காணலாம்.

Samayam Tamil 15 Sep 2020, 10:06 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட வேலையிழப்பைத் தொடர்ந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர். அப்போது பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர். அதன்பிறகு மே இறுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இந்த சூழலில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் கூட்டத்தொடரில் முதல்முறை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்களவையில் நேற்று பிஜு ஜனதா தளக் கட்சி உறுப்பினர் பார்த்ருஹரி மகதாப் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
Samayam Tamil Migrant Deaths


அதாவது, ஊரடங்கு நாட்களில் மாநில/ யூனியன் பிரதேச வாரியாக சொந்த ஊருக்கு இடம்பெயறும் போது ஏற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்புகள்/ காயங்கள் குறித்து பதில் அளிக்க வேண்டும். ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பு புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை காக்கவும், சமூக, பொருளாதார விஷயங்களை பாதுகாக்கவும் அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்ததா என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், கோவிட்-19 பாதிப்பால் அமலுக்கு வந்த ஊரடங்கு காலங்களில் மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகம், சுய உதவிக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்டவை மூலம் பொதுமக்களுக்கு தேவையான விஷயங்களை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற முடியாத 17 எம்.பி.க்கள்... என்ன காரணம் தெரியுமா?

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டுள்ளன. ஊரடங்கு காலங்களில் இடம்பெயர்தல் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவோ அல்லது காயமடைந்ததாகவோ அரசிடம் எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இது உண்மைக்கு மாறாக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் போது பசியாலும், நீண்ட தூரம் நடந்தே சென்றதால் ஏற்பட்ட களைப்பாலும் பலர் உயிரிழந்ததை காண முடிந்தது. குறிப்பாக கர்ப்பிணிகள் பலரும் பெரும் துயரத்தை அனுபவித்தது குறிப்பிட்டத்தக்கது.

அடுத்த செய்தி