ஆப்நகரம்

அமைதியான முறையில் போராட வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

வன்முறைக்கு காரணமானவர்கள் யாரோ அவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்

Samayam Tamil 15 Dec 2019, 8:28 pm
டெல்லி: குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் அமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் இந்த மசோதாவுக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவதால் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் நடைபெற்றும் வரும் போராட்டத்தில் மொத்தம் 15 பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. காலி ரயில்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். அத்துடன் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்!

அதேபோல், டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் இன்று நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தொடர்ந்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் தான் வன்முறைக்கு காரணம் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், வன்முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என மாணவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. அமைதி காக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, அமைதியான முறையிலேயே போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அத்துடன் துணை நிலை ஆளுநரிடம் பேசி இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும், டெல்லி அரசு தரப்பில் இருந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வன்முறைக்கு காரணமானவர்கள் யாரோ அவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி