ஆப்நகரம்

முன்னாள் முதல்வர்களுக்கு நிரந்தர அரசு பங்களா கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களில் நிரந்தரமாக தங்க அனுமதி கிடையாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 7 May 2018, 4:45 pm
முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களில் நிரந்தரமாக தங்க அனுமதி கிடையாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil முன்னாள் முதல்வர்களுக்கு நிரந்தர அரசு பங்களா கிடையாது
முன்னாள் முதல்வர்களுக்கு நிரந்தர அரசு பங்களா கிடையாது


உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களில் தங்குவதற்கு அந்த மாநில அரசு சட்டப்படி அனுமதி அளித்து இருந்தது. இதை ரத்து செய்து இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவித்து இருப்பதாவது:

முன்னாள் முதல்வர்கள் எந்த வகையிலும் அரசு பங்களாக்களில் தங்குவதற்கு தகுதி படைத்தவர்கள் அல்ல. நிரந்தரமாக அரசு பங்களாக்களில் தங்குவதற்கு அனுமதி அளிக்க முடியாது. அவர்கள் அலுவலகப் பணியில் இல்லாதபோது, தங்குவதற்கு அனுமதி அளிக்க முடியாது. அவர்கள் முன்பு முதல்வர்களாக இருந்த ஒரே காரணத்திற்காக அனுமதி அளிக்க முடியாது.

ஒருவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டால் அது வரலாறு ஆகிவிடும். அவரது மீதமுள்ள நாட்களுக்கும் பங்களாவில் தங்குவதற்கு அனுமதி அளிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களில் தங்குவதற்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்து இருந்தது. இதை எதிர்த்து கடந்த 2016ல் தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக் பிரஹாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது. இதையடுத்து இவர்கள் அரசு பங்களாக்களில் தங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதே ஆண்டில் சட்டசபையில் முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களில் தங்குவதற்கு அனுமதி அளிக்கும் மசோதாவை அந்த மாநில அரசு கொண்டு வந்தது.

இந்த உத்தரவால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி மற்றும் ராம் நரேஷ் யாதவ் ஆகியோர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் முதல்வர்களுக்கு அரசு பங்களா வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு கேட்டுக் கொண்டது. அப்போது நீதிபதி அனில் தவே தலைமையிலான என்.வி.ரமணா, ஆர். பானுமதி அடங்கிய மூன்று நபர் பெஞ்ச் மறுப்பு தெரிவித்தது. இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய அரசுதான் அவர்களது குடியிருப்பு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

அடுத்த செய்தி