ஆப்நகரம்

ஹரியானா சட்டப்பேரவையில் நிர்வாண சாமியார் பேச்சு!

ஹரியானா மாநில சட்டப்பேரவையில் நிர்வாண சாமியார், இந்தியாவை சுத்தப்படுத்துவது எவ்வாறு என்ற தலைப்பில் உரையாற்றிய சம்பவம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 27 Aug 2016, 11:50 pm
ஹரியானா மாநில சட்டப்பேரவையில் நிர்வாண சாமியார், இந்தியாவை சுத்தப்படுத்துவது எவ்வாறு என்ற தலைப்பில் உரையாற்றிய சம்பவம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil nude jain monk addresses haryana assembly
ஹரியானா சட்டப்பேரவையில் நிர்வாண சாமியார் பேச்சு!


அம்மாநில சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. முதல்நாளில் என்ன செய்யலாம் என வித்தியாசமாக யோசித்த ஆளுங்கட்சியினர், ஜெயின் சாமியார் ஒருவரை அழைத்து பேச வைத்து, அவையை தொடங்க முடிவு செய்தனர். அதற்காக, அவர்கள் தேர்வு செய்த ஆள்தான் சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

ஜெயின் சமூகத் தலைவரும், நிர்வாண சாமியாரும் ஆன தருண் சாகர் என்பவரை அழைப்பதாக, தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, வெள்ளிக்கிழமை அவை தொடங்கியதும், ஆண், பெண் எம்எல்ஏ.,க்கள் அனைவரும் கூடிய நிலையில், நிர்வாண நிலையில், தருண் சாகர் அழைத்துவரப்பட்டார். அவர் நுழைந்ததும், அங்கிருந்த பெண் எம்எல்ஏ.,க்கள் அவரிடம் ஆசிபெற்றனர்.

இதன்பின், இந்தியாவை சுத்தம் செய்து, ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை மக்களுக்கு தருவது எப்படி என்றும், பாகிஸ்தான் உடனான பிரச்னை குறித்தும், பாலுறவு குறித்தும் பல விதமான கருத்துகளில், 40 நிமிடங்களுக்கு மேலாக, தருண் சாகர் உரை நிகழ்த்தினார்.

அவர் பேசிமுடித்துவிட்டு, அடுத்த வேலைக்குச் சென்றுவிட்டார். ஆனால், அரசியல்வாதிகள் அப்படிப்பட்டவர்கள் இல்லையே… ஒரு நிர்வாண ஆசாமியை எப்படி அழைத்து வந்து, சட்டப்பேரவையில் பேச வைக்கலாம், அவையின் மரியாதை கெட்டுவிட்டது என, ஹரியானா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர். குறிப்பாக, மாநில முதலமைச்சர், ஆளுநர் இருக்கைக்கு மேலாக, தனி இருக்கை அமைத்து, நிர்வாண சாமியாரை எவ்வாறு பேச அனுதிக்கலாம் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விவகாரம், தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமூக ஊடங்களிலும் பலர் ஆர்எஸ்எஸ், பிஜேபி உள்ளிட்டவர்களின் மதவாத போக்கை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், புற அழகு பற்றி கவலைப்படாமல், அக அழகையும், இந்தியாவை சீர்படுத்துவது பற்றியும் யோசிக்க வேண்டும் என, ஹரியானா ஆளுங்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி