ஆப்நகரம்

"ஒரு நபர் - ஒரு உறுதிமொழி"... பிரதமர் மோடியின் அடுத்த ஸ்லோகன் ரெடி!

நாட்டின் வளர்ச்சிக்காக மகாத்மா காந்தி கண்ட கனவுகளை நனவாக்கும் நோக்கில், ஒவ்வொரு குடிமகனும ஏதாவதொரு உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 3 Oct 2019, 4:44 pm
காந்திஜியின் 150 -ஆவது பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், சபர்மதி நதிக்கரையில் அமைந்துள்ள காந்தியடிகள் வாழ்ந்த ஆஸ்ரமத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை புரிந்தார்.
Samayam Tamil sag


அங்குள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தொடர்ந்து ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும், அங்கு துப்புரவு பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களையும் பிரதமர் கௌரவித்தார்.

தமது வருகையை பதிவு செய்யும் விதமாக, சபர்மதி ஆஸ்ரமத்தில் உள்ள பதிவேட்டில் தமது பெயரையும் மோடி பதிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து, சபர்மதி நதிக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது:
காந்திஜி தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த தூய்மை பண்பை, பாஜக அரசு நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது. சுற்றுப்புற தூய்மையை கருத்தில் கொண்டே "தூய்மை இந்தியா" திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, கடந்த ஐந்தாண்டுகளில் (60 மாதங்களில்) நாட்டின் பல்வேறு பகுதிகளில் 60 கோடி பேருக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. மேலும் 11 கோடி பொதுமக்களுக்கு இந்த அடிப்படை வசதியை ஏற்படுத்தி தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

உலகமே வியந்து பாராட்டும் இத்திட்டத்தின் பயனாக, இந்தியாவை திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடாக அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

தேசத்தின் வளர்ச்சிக்காக, மகாத்மா காந்தி கண்ட கனவுகளை நனவாக்க, நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும், ஏதாவதொரு உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, அதனை இன்று முதல் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு கடைபிடிக்க வேண்டும் .

காந்திஜியின் பிறந்த நாளான இன்று நாட்டு மக்களுக்கு இதனை வேண்டுகோளாக விடுகிறேன் என பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, மகாத்மா காந்தியின் 150 -ஆவது பிறந்த நாளையொட்டி, 150 ரூபாய் மதிப்புள்ள நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி