ஆப்நகரம்

கூட்டத்தொடர் புறக்கணிப்பு; போராட்டம் வாபஸ் - அனல்பறக்கும் நாடாளுமன்றம்!

எம்.பிக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளன.

Samayam Tamil 22 Sep 2020, 12:11 pm
நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது பல்வேறு மாநில விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது அநாகரீகமாக நடந்து கொண்ட எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் நேற்று மாலை முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு விடிய விடிய போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு இன்று காலை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், டீ கொடுத்து உபசரித்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தியது. இதைப் பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Samayam Tamil Rajya Sabha Boycott


இன்றைய காலை கூடிய மாநிலங்களவையில், எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். இல்லையெனில் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் என்று கூறினார். அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால், அவர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிப்பது பற்றி அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய வெங்கையா நாயுடு, மாநிலங்களவை எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. இந்த நடவடிக்கை எம்.பிக்களுக்கு எதிரானது அல்ல. அவர்களது செயல்பாடுகளுக்கு எதிரானது. மாநிலங்களவை துணைத்தலைவர் 13 முறை கேட்டுக் கொண்டு எம்.பிக்கள் தங்கள் இருக்கைகளுக்கு செல்ல மறுத்துள்ளனர். இது ஆரோக்கியமான விஷயமல்ல என்று கூறினார்.

விடிய விடிய தர்ணா; காலையில் எம்.பிக்களுக்கு டீ கொண்டு வந்த துணைத்தலைவர்!

இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையில் மாநிலங்களவையில் தனக்கு நேர்ந்த அவமதிப்புக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடிதம் அளித்துள்ளார்.

இந்நிலையில் 8 எம்.பிக்களும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அதாவது கூட்டத்தொடரைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கும் விதமாக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி