ஆப்நகரம்

முன்னாள் மத்தியமைச்சரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அன்பு மகள் !

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவுக்காக, சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியதற்கான கட்டணமாக ஒரு ரூபாயை, வழக்கறிஞர் ஹரீஸ் சால்விக்கு அளிக்க வேண்டும் என்ற தமது தாயான சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சுரி சுவராஜ் இன்று நிறைவேற்றியுள்ளார்.

Samayam Tamil 28 Sep 2019, 12:06 pm
இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் ராணுவ ரகசியங்களை உளவுப் பார்த்ததாக கூறி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது.
Samayam Tamil hsss


இதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்திருந்த தூக்குத் தண்டனைக்கு தடை விதித்தது.
அத்துடன், அவர் சட்டரீதியான ஆலோசனைகளை பெற, வழக்கறிஞர் ஒருவரையும் இந்தியா நியமிக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

அப்போது, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர், அண்மையில் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ். அவர். குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடி, அவரது உயிரை காப்பாற்றிய வழக்கறிஞர் ஹரீஸ் சால்வியை கௌரவப்படுத்த வேண்டும் என எண்ணினார்.

இதையடுத்து, கடந்த மாதம் 6 -ஆம் தேதி (ஆகஸ்ட் 6) இரவு 8:50 மணியளவில், சால்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் சுஷ்மா, "ஜாதவ் வழக்கில் சிறப்பாக வாதாடிய உங்களுக்கு வழக்கறிஞர் கட்டணமாக ஒரு ரூபாயை தந்து கௌரவிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனை நாளைக்கு வந்து பெற்று கொள்ளுங்கள் " என உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
"அந்த மதிப்புமிக்க தொகையை நாளை நிச்சயம் வந்து உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன்" என, ஹரீஸ் சால்வியும் உறுதியளித்திருந்தார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக, ஆகஸ்ட் 6 -ஆம் தேதி இரவே, மாரடைப்பு காரணமாக சுஷ்மா ஸ்வராஜ் மரணமடைந்தார்.

இந்த நிலையில், தமது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதத்தில், சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சுரி ஸ்வராஜ், வழக்கறிஞர் ஹரீஸ் சால்வி இன்று நேரில் சந்தித்து, அவரது அன்னை அவருக்கு தர விரும்பிய ஒரு ரூபாயை அளித்து, சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இதனை, சுஷ்மா ஸ்வராஜின் கணவரும், மிசோராம் மாநில முன்னாள் ஆளுநருமான ஸ்வராஜ் கவுசல், தமது ட்விட்டர் பதிவி்ல் இன்று உறுதி செய்துள்ளார்.

அடுத்த செய்தி