ஆப்நகரம்

ப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 26ம் தேதி வரையில் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Samayam Tamil 22 Aug 2019, 6:54 pm
நாட்டையே பரபரப்புக்கு ஆளாக்கிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரத்திற்கு நேற்று முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், வீட்டின் சுவர் ஏறி குதித்து, அவரை சிபிஐ கைது செய்தது.
Samayam Tamil p chidambaram in cbi custody


நேற்றிரவு முதல் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. பல கேள்விகளுக்கு ப.சிதம்பரம் மழுப்பலான பதில்களை அளித்ததாக சிபிஐ தரப்பு கூறியது. இதையடுத்து இன்று பிற்பகல் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு ப.சிதம்பரத்தை அழைத்துச் சென்றனர்.

இதையொட்டி டெல்லி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் வாதிட மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றம் சென்றனர்.

சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். ப.சிதம்பரத்தை நீதிமன்றத்திற்குள் நுழையும் போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தந்தையிடம் பேச முயன்றார். ஆனால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து தொடங்கிய வழக்கு விசாரணையில், சிபிஐ மற்றும் ப.சிதம்பரம் தரப்பு காரசார வாதங்களை முன்வைத்தது. அதாவது, வழக்கு விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்க வில்லை என்றும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தியது.

ஆனால், சிபிஐ கேட்ட கேள்விகளையே கேட்கின்றனர். அனைத்திற்கும் ப.சிதம்பரம் பதில் அளித்துவிட்டார். விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதால், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ப.சிதம்பரம் தரப்பு வாதிட்டது.

இதையடுத்து ப.சிதம்பரம் நேரடியாக நீதிபதியிடம் பேசினார். இதைக் கேட்ட நீதிபதி, உத்தரவை அரை மணி நேரம் ஒத்திவைத்தார். பின்னர், இன்று மாலை மீண்டும் அமர்வுக்கு வந்த நீதிபதி, ப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீதிபதஅனுமதி அளித்துள்ளார். அதன்படி வரும் 26ம் தேதி வரையில், ப.சிதம்பரம் காவலில் எடுத்து விசாரிக்கப்படுகிறார்.

அடுத்த செய்தி