ஆப்நகரம்

பட்டும் திருந்தாத பாகிஸ்தான்....பயங்கரவாத முகாம்கள் அமைப்பதில் தீவிரம்

ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில் தனது ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் தோலவியடைந்து வருவதையடுத்து, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் இறங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 11 Sep 2019, 10:31 pm
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் அதிரடியாக ரத்து செய்தது. இதன் மூலம், இம்மாநிலத்தை இந்த புவி மண்டலத்திலேயே மிகப்பெரிய திறந்தவெளி சிறையாக இந்திய அரசு மாற்றிவிட்டதென பாகிஸ்தான் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
Samayam Tamil JeM


அங்கு நித்தமும் தொடர்ந்து மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் அரசு கூக்குரலிட்டு வருகின்றது. ஆனால், பாகிஸ்தானின் இந்த புலம்பலை சர்வதேச நாடுகள் துளியும் கண்டு கொள்ளாததையடுத்து, தனக்கே உரித்தான பாணியில், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் திட்டமிட்டுள்ளன.

தங்களின் செல்லப்பிள்ளைகளான லஷ்கர் -இ-தொய்பா, ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்புகளின் மூலம் இந்த நாச வேலையை செயல்படுத்த அந்த நாடு முனைந்து வருகிறது.

இதற்கு வசதியாக, இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோட்டு பகுதிகளில் 30 பயங்கரவாதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றிலிருந்து சுமார் 230 முதல் 280 வரை பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் இந்த ஊடுருவல் முயற்சி எப்படியேனும் முறியடிக்கப்படும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, ஜம்மு -காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் -இ-முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில், பிப்ரவரி 26- ஆம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாலாக்கோட்டில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத முகாம்களை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி