ஆப்நகரம்

இந்தியா மாதிரி நாட்டில் கொரோனா பாதிப்பு சாதாரணமானது அல்ல: ஒத்துக்கொண்ட பிரதமர் மோடி

பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் ஜன்தா கர்ஃப்யூ முறைமையை பின்பற்றுங்கள் என்று மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Mar 2020, 8:40 pm
கொரோனா பாதிப்பு உலகநாடுகளைப் போலவே இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 160க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 4 உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்று மக்களிடையே கொரோனா குறித்து உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
Samayam Tamil pm modi on corona


இன்று (வியாழக்கிழமை) இரவு 08.00மணியளவில் இந்த உரை ஒளிபரப்பாக உள்ளது. அவற்றை மத்திய அரசின் சில அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பார்க்க முடியும்.

அவ்வாறு பேசும்போது பிரதமர் மோடி, “ இதுவரை இந்தியா பாதுகாப்பாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்கள் நம்பிக்கை தவறானது. கொரோனா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு. மக்கள் விழிப்புணர்வோடு கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.

அலட்சியம் கூடாது. அத்தியாவசிய நோக்கங்களுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். முடிந்த அளவிற்கு மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை பொதுமக்கள் தாங்களே நேரடியாக பொறுப்பில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இதற்காக ஜனதா கஃப்யூ ( janta curfew ) என்ற முறைமையையும் பின்பற்றக் கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையை மக்களாகவே ஏற்படுத்திக்கொண்டு வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9மணி வரை யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்துடன் “இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் கொரோனாவைப் போன்ற ஒரு சூழல் என்பது சாதாரணமானது அல்ல” என்றும் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததைப் போலவே இந்தியாவுக்கு இது மிகப்பெரும் சவாலாக இருக்கப்போகிறது என்பதை பிரதமரின் பேச்சின் தொடக்கமே உணர்த்துகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி