ஆப்நகரம்

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அதிபர் தேர்தலில் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை கோத்தபய ராஜபக்ச தாண்டியுள்ளார். இதன் மூலம் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது

Samayam Tamil 17 Nov 2019, 4:36 pm
டெல்லி: இலங்கையின் அடுத்த அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி 9ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் மொத்தம் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு... 69 இடங்களில் வன்முறை

இதையடுத்து, அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பொது ஜன பெரமுனா கட்சியின் வேட்பாளரும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த அவரது சகோதரருமான கோத்தபய ராஜபக்ச மற்றும் ஆளுங்கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்த கோத்தபய ராஜபக்சே!

வாக்கு எண்ணிக்கையில் இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில், வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை கோத்தபய ராஜபக்ச தாண்டியுள்ளார். இதன் மூலம் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது. அதேசமயம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள சஜித் பிரேமதாச, இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவை பாராட்டுவதாகவும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,”இரு நாடுகளின் குடிமக்களுக்கு இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி