ஆப்நகரம்

ஹைதராபாத் கனமழை: தெலங்கானா, ஆந்திர முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு!

தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் கனமழை தொடர்பாக அம்மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசியுள்ளார்.

Samayam Tamil 14 Oct 2020, 8:19 pm
ஆந்திரா கடற்கரையை மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால், தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் உள்பட அம்மாநிலத்தின் 14 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


ஹைதராபாத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆறு மற்றும் குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடைவிடாது பெய்துவரும் மழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்படும் காட்சிகள், பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் வழையால் பல்வேறு நகரங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், அம்மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

புரட்டி எடுத்த ஹைதராபாத் கனமழை; இப்படியொரு பலத்த சேதம் - தத்தளிக்கும் பொதுமக்கள்!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர், போலீசார், வருவாய்த்துறையினர் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், கனமழையில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அம்மாநிலங்களில் கடுமையான சேதாரம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து அம்மாநில முதல்வர்கள் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டறிந்த பிரதமர் மோடி, மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்துள்ளார்.

அடுத்த செய்தி