ஆப்நகரம்

பற்றி எரிந்த போராட்டம்; துப்பாக்கிச்சூடு - கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.

Samayam Tamil 20 Dec 2019, 11:28 am
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாட்டின் முக்கிய பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil CAA Protest


இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் : இன்று மட்டும் 3 பேர் பலி

இதனை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசினர். மேலும் தடியடி நடத்தப்பட்டது. இதில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மங்களூரு வடக்கு காவல் நிலையத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டதாக விளக்கம் அளித்தனர்.

நிர்பயா வழக்கு: நானும் 'மைனர்' என கூறிய தூக்குத்தண்டனை கைதி.. கோர்ட்டின் அதிரடி..!

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் மொபைல் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும் மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பெங்களூரு டவுன் ஹால், அடுகோடி உள்ளிட்ட இடங்களில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அங்கு விரைந்த போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்ட பயத்தால் ஏர்டல் உதவியை நாடிய போலீஸ்!

அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வன்முறையில் ஈடுபட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.

போராட்டம் என்ற பெயரில் வன்முறை சம்பவங்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். இந்த சூழலில் மங்களூரு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வரும் ஞாயிறு நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி