ஆப்நகரம்

நமாஸ் செய்த முஸ்லிம்களை எட்டி உதைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.. பாய்ந்து வந்த "ஆர்டர்"

சாலையோரத்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களை கண்மூடித்தனமாக தாக்கிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 8 Mar 2024, 6:23 pm
டெல்லி: டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களை காலால் எட்டி உதைத்தும், தலையில் ஓங்கி அடித்தும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil namaz delhi


இந்தியாவில் சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளும், நடவடிக்கைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் இருந்தே ஒரு மதத்தினரை ஒழிக்க வேண்டும் என்று மாநாடு ஒன்றில் மற்றொரு மதத் தலைவர் பேசும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. இதுதவிர, மாடுகளை வாங்கி வருபவர்களை பசு கடத்தல்காரர்கள் என கும்பலாக தாக்குவதும், பொதுஇடங்களில் அவர்களை வழிபாடு நடத்தக்கூடாது என சொல்வதும் சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்திருக்கிறது. டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் பெரிய மசூதி ஒன்று உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வந்து தொழுகை செய்வது வழக்கம். அந்த வகையில், இன்று மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், உள்ளே இடம் கிடைக்காத சிலர், வெளியே சாலையோரத்தில் அமர்ந்து நமாஸ் செய்து கொண்டிருந்தனர்.


அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர், நமாஸ் செய்து கொண்டிருந்த ஒரு நபரை பின்பகுதியில் ஓங்கி மிதித்தார். பிறகு மற்றொருவரை தலையிலும், முகத்திலும் தாக்கினார். ஆனால், தாக்கப்பட்டவர்கள் அமைதி காத்தனர். அப்போது இதை பார்த்துக் கொண்டிருந்த மற்ற முஸ்லிம்கள், அந்த காவல் ஆய்வாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், அந்த காவல் ஆய்வாளரை அவர்கள் தாக்கவும் முற்பட்டனர்.

இதையடுத்து, மற்ற போலீஸாரும், பொதுமக்களும் சமாதானப்படுத்தி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ காலை முதலாக சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மேலும், அந்த இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரவலாக வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லி காவல் (வடக்கு) துணை ஆய்வாளர் எம்.கே. மீனா, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி