ஆப்நகரம்

அரசு பங்களாவை காலி செய்தார் பிரியங்கா!!

மத்திய அரசின் உத்தரவையடுத்து, டெல்லியில் தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை பிரியங்கா காந்தி இன்று முறைப்படி காலி செய்தார்.

Samayam Tamil 30 Jul 2020, 7:02 pm
காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திக்கு, டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில் அரசு பங்களா வழங்கப்பட்டிருந்தது.
Samayam Tamil priyanka


அவர் இதுநாள்வரை, சிறப்பு பாதுகாப்பு குழுவின் (எஸ்பிஜி) கண்காணிப்பின் கீழ் இருந்து வந்ததால், பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இங்கு வசித்துவந்த நிலையில், பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டிருந்த எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு அண்மையில் வாபஸ் பெற்றது. அத்துடன் அவர் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு மாற்றப்பட்டார்.

அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ்!

இந்த நிலையில், "எஸ்பிஜி பாதுகாப்பில் இல்லாதவர்கள் லோதி எஸ்டேட்டில் உள்ள அரசு பங்களாவில் வசிக்க முடியாது எனவும், எனவே பங்களா ஒரு மாதத்துக்குள் காலி செய்துவிட வேண்டும்" என்று மத்திய வீட்டுவசதி துறை அமைச்சகம், கடந்த மாதம் இறுதியில் பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதையடுத்து அவர், பல ஆண்டுகளாக வசித்துவந்த அரசு பங்களாவை இன்று (ஜூலை 30) முறைப்படி காலி செய்துள்ளார். பங்களா தான் காலி செய்ததற்கு அடையாளமாக அதன் சாவியை மத்திய பொதுப் பணித்துறை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பதிலுக்கு அவர்களுக்கு, பங்களாவை காலி செய்ததை உறுதி செய்வதற்கான சான்றிதழை பிரியங்காவிடம் அளித்தனர்.

முன்னதாக, பங்களாவில் இருக்கும் பொருள்கள் ஏதேனும் சேதமடைந்துள்ளதா, மின்கட்டணம், குடிநீர் வரி போன்றவை நிலுவையில் உள்ளதா என்பன குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பிரியங்கா காந்தி வசித்துவந்த பங்களா நல்ல நிலையில் இருப்பதாகவும், மின்கட்டணம், குடிநீர் வரி ஆகியவற்றை அவர் தவறாமல் செலுத்தி வந்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி