ஆப்நகரம்

மோடி பேச்சுக்கு காலாவதி நாள் குறித்த பிரியங்கா!

பிரியங்கா காந்தி உத்தரப்ப பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார். பிரக்யாராஜ் முதல் வாரணாசி வரை பயணிக்கும் அவர் பல இடங்களில் மக்களைச் சந்தித்துப் பேசி அவர்களுடைய குறைகளைக் கேட்டுவருகிறார்.

Samayam Tamil 19 Mar 2019, 9:07 pm
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவினரின் பேச்சுக்கு காலாவதி நாள் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியிருக்கிறார்.
Samayam Tamil _2ad4f862-4a16-11e9-9111-3135b956f139


பிரியங்கா காந்தி உத்தரப்ப பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார். பிரக்யாராஜ் முதல் வாரணாசி வரை பயணிக்கும் அவர் பல இடங்களில் மக்களைச் சந்தித்துப் பேசி அவர்களுடைய குறைகளைக் கேட்டுவருகிறார்.

இன்று தனது பயணத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா, "காங்கிரஸ் 70 ஆண்டுகளில் செய்யாதது என பாஜகவினர் பேசிக்கொண்டிருக்கிறார். அதற்கு ஒரு காலாவதி நாள் காத்திருக்கிறது. அவர்கள் பேச வேண்டியது, ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்பதுதான்." எனக் கூறினார்.

அண்மையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், "காங்கிரஸ் இந்தியாவை அதிகபட்ச காலத்திற்கு ஆட்சி செய்திருக்கிறது. பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வறுமையால் பின்தங்கியப் போனதைத்தான் அவர்களால் செய்ய முடிந்தது." என விமர்சித்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரியங்காவின் பேச்சு அமைந்துள்ளது.

"அவர்கள் விடும் அறிக்கைகள், விளம்பரங்கள் எல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன. ஆனால், களத்தில் எந்த தடயத்தையும் காணவில்லையே. நான் தினமும் மக்களைச் சந்தித்துக்கொண்டே வருகிறேன். அனைத்து தரப்பு மக்களும் நொந்துபோயிருக்கிறார்கள்." எனவும் குறிப்பிட்டார்.

"யாரும் இந்த மோடி ஆட்சியில் திருப்தி அடையவில்லை. 2019ல் மக்கள் இந்த அரசை மாற்றத்தான் போகிறார்கள். விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என எல்லோரும் விரக்தியில் உள்ளார்கள். அவர்கள் இணைந்து இந்த அரசை மாற்றுவார்கள்." எனவும் பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார்

படோகி மாவட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசிய பிரியங்கா, மக்களவைத் தேர்தலுக்காக கடுமையாக உழைத்து களப்பணி ஆற்றுமாறு வேண்டிக்கொண்டார்.

அடுத்த செய்தி