ஆப்நகரம்

புதிய ரூபாய் நோட்டுகள் பற்றிய விவரங்களை வெளியிட உத்தரவு

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணமதிப்பு நீக்க உத்தரவு வெளியான பின் அந்த மாத இறுதிக்குள் எத்தனை புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன? அவை அச்சிடப்பட்ட தேதி என்ன? என்ற தகவலை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Dec 2018, 12:39 pm
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எவ்வளவு அச்சிடப்பட்டது என்ற தகவலைத் தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil salary-money-notes


2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மத்திய அரசு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கியது. இதற்குப் பின் நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் மொத்த மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடியாக குறைந்து வரலாறு காணாத சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணமதிப்பு நீக்க உத்தரவு வெளியான பின் அந்த மாத இறுதிக்குள் எத்தனை புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன? அவை அச்சிடப்பட்ட தேதி என்ன? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிரிந்தர் திங்ரா என்பவர் எனக் கேட்டுள்ளார்.

விண்ணப்பித்த நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், ஹரிந்தரின் விண்ணப்பித்துக்கு மூன்று மாதங்கள் கழித்து பதில் கிடைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தகவல் தொடர்பு அதிகாரி அளித்த அந்த பதிலில், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைக் குலைக்கும் வாய்ப்பு உள்ளதால் விண்ணப்பித்தவர் கோரிய தகவலை அளிக்க முடியாது என மறுத்துள்ளார்.

இதனை எதிர்த்து தகவல் ஆணையத்தின் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட தேதிகளில் (நவம்பர் 9, 2016 முதல் நவம்பர் 30, 2016 வரை) அச்சிடிப்பட்ட ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை மட்டும் தெரிவிப்பது எந்த வகையில் நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதிக்கும் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர் கோரிய தகவலை அளிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க இந்திய விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் இதற்காக ரிசர்வ் வங்கி இந்திய விமானப்படைக்கு கட்டணம் செலுத்தியதாகவும் ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை மாதம் கூறியது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பின், 2016 - 2017ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் வருவாய் 23.5% குறைந்துவிட்டது. ஆனால் செலவு 107.8% அதிகரித்துவிட்டது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

அடுத்த செய்தி