ஆப்நகரம்

தொடங்கியது சட்டமன்றக் கூட்டத்தொடர்; ஆளுநர் ஆப்சென்ட் - பட்ஜெட் தாக்கல்!

ஆளுநர் வராத நிலையிலும் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 20 Jul 2020, 12:39 pm
புதுச்சேரி மாநிலத்தில் முதலில் இடைக்கால பட்ஜெட்டும், அதன்பிறகு முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் மூன்று மாதங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அவகாசம் நிறைவடைந்து விட்டது. எனவே முழு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற்று தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு இருந்தது. இதையடுத்து ரூ.9,500 கோடி மதிப்பிலான முழு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களது ஒப்புதல் கிடைத்த நிலையில், சட்டமன்றத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Samayam Tamil Narayanaswamy


இன்று(ஜூலை 20) காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. நிதியமைச்சக பொறுப்பு முதலமைச்சர் வசமிருப்பதால் அவரே பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ட்விட்டரில் மோடி 3வது இடம்... எப்படி நடந்தது?

ஆனால் படித்து பார்க்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அரசுக்கு ஆளுநர் கிரண் பேடி தகவல் அனுப்பினார். இதுதொடர்பாக நேற்று இரவு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆலோசித்த நிலையில், ஆளுநருக்கு தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் உரிய நலத்திட்ட உதவிகளை செய்வதற்கு பட்ஜெட் தாக்கல் அவசியம் என்று நினைக்கிறேன்.

எனவே இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என்று நம்புகிறேன். இல்லையெனில் புதுச்சேரி அரசும், மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

வெள்ளத்தில் மிதக்கும் மாநிலம்; உயரும் பலி எண்ணிக்கை - தத்தளிக்கும் மக்கள்!

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டத்தொடர் ஆளுநருக்காக 15 நிமிடங்கள் வரை காத்திருந்தது. ஆனால் அவர் வராததால் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் கூட்டம் தொடங்கியது.

அவர் கிரண்பேடி வராததால் ஆளுநர் உரையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அடுத்த செய்தி