ஆப்நகரம்

அம்பானி மகள் திருமணவிழாவில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் பியான்ஸே நோல்ஸ்..!!

இஷா அம்பானி திருமணத்தை முன்னிட்டு, இசை நிகழ்ச்சி நடத்தி பாப் இசையுலகின் முடிசூடா ராணி பியான்ஸே நோல்ஸ் இந்தியா வந்தடைந்தார்.

Samayam Tamil 9 Dec 2018, 4:37 pm
பாப் இசையுலகின் முடிசூடா ராணியான பியான்ஸே நோல்ஸ் அம்பானி மகள் திருமணத்தில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார். இது அவரது முதல் இந்தியப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil இந்தியா வந்தார் பியான்ஸே நோல்ஸ்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு


முகேஷ் அம்பானி மகள் இஷா மற்றும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அஜே பிரமல் மகன் ஆனந்த் பிரமல் இருவருக்கும் வரும் 12ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இஷா மற்றும் ஆனந்த் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. நேற்று முதல் டிசம்பர் 10 வரை நான்கு நாட்களுக்கு உதய்ப்பூரில் அன்னசேவா என்ற பெயரில் அன்னதானம் வழங்கப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் தனிப்பட்ட தேவைகளை மதித்து மொபைல் போன்களில் திருமண நிகழ்வுகளை படம் பிடிக்க வேண்டாம் என அம்பானி மற்றும் ஆனந்த பிரமல் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, இதே நடைமுறை பாலிவுட் நடிகைகள் ப்ரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் திருமண நிகழ்வுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், திருமணம் முடிந்த பிறகு நிகழ்வுகளை குறித்த புகைப்படங்களை ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரம்மாண்ட நிகழ்வாக திருமண கொண்டாட்டங்கள் அமைந்தாலும், இஷா மற்றும் ஆனந்த் பிரமல்லின் முகூர்த்தம் மும்பை அண்டிலா வீட்டில் எளியமுறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்பார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் வரவேற்பு, மெஹந்தி உள்ளிட்ட வைபவங்கள் ராஜஸ்தானில் நடைபெறும். மும்பையில் முகூர்த்தம் முடிந்த பிறகு அங்கேயும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த அம்பானி குடும்பம் திட்டமிட்டுள்ளது. அதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு இஷா மற்றும் ஆனந்த் திருமணத்தை முன்னிட்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பாப் இசையுலகின் முடிசூடா ராணியான பியான்ஸே நோல்ஸ் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்காக இன்று மதியம் அவர், உதய்பூர் வந்தடைந்தார்.

உதய்பூர் வந்திறங்கிய பியான்ஸேவை பார்த்த இந்திய ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா வந்தடைந்த பியான்ஸே புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

எனினும், இதுவரை பியான்ஸே நோல்ஸ் இந்தியாவில் தனியாக நிகழ்ச்சி நடத்தியது கிடையாது. இதற்கிடையில், ஒரு திருமணத்திற்காக பியான்ஸே இசை நிகழ்ச்சி நடத்துவது முரணாக தெரிகிறது என பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி