ஆப்நகரம்

ரஃபேல், சபரிமலை ஐய்யப்பன் கோயில் சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால் அதற்கு முன்னதாக பல்வேறு முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது

Samayam Tamil 13 Nov 2019, 1:15 pm
டெல்லி: சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் வலுத்தன. தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், இந்து அமைப்புகள், பாஜகவினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர்.

தீர்ப்பையடுத்து பல பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முயன்றனர். ஆனால், கடுமையான எதிர்ப்பின் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும், சில பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ததாக கேரள அரசு தெரிவித்தது.

’பெண்கள் சபரிமலை’யில் பொங்கல் திருவிழா - கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

இதனிடையே, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது, பிந்து, கனகதுர்கா ஆகிய 50 வயதிற்குட்பட்ட இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியானதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

அதேசமயம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

10 நாட்களில் நாட்டையே மாற்றப் போகும் 4 தீர்ப்புகள்

இது தொடர்பான விசாரணை ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், இதன் மீதான தீர்ப்பு நவம்பர் 14ஆம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஆர்.எஃப் நரிமன், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கவுள்ளது.

அத்துடன், ரஃபேல் வழக்கிலும் தொடரப்படட் சீராய்வு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், கே.எம்.ஜோசப் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.

Sabarimala Women Entry: சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க மசோதா!- கேரளாவில் கிளம்பிய புது பிரச்னை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால் அதற்கு முன்னதாக பல்வேறு முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி