ஆப்நகரம்

காஷ்மீருக்கு சென்ற தலைவர்கள் திருப்ப அனுப்பப்பட்டனர்!

காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டப் பிறகு, ராகுல் தலைமையிலான எதிர்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்று மக்களை சந்திக்க முயன்றனர். ஆனால், பாதுகாப்பு கருதி ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Samayam Tamil 24 Aug 2019, 5:05 pm
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், களநிலவரத்தை நேரில் பார்வையிட, ராகுல் தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்கட்சி தலைவர்கள் திருப்ப அனுப்பப்பட்டனர்.
Samayam Tamil rahul  in kashmir


காஷ்மீரில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதற்காக சட்டப்பிரிவு 370 மற்றும் 335ஏ திரும்பப்பெறுவதாக குடியரசுத்தலைவர் அறிவித்தார். முன்னதாக சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, காஷ்மீர் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஏராளமான துணைராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

(காஷ்மீரில் கொடுமை:பிரசவ வலியுடன் 6 கி.மீ நடந்து சென்ற கர்ப்பிணி!)

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீருக்கு நேரில் சென்று களநிலவரத்தை பார்வையிடுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், எதிர்கட்சி தலைவர்கள் யாரும் வரவேண்டாம் என்று காஷ்மீர் அரசாங்கம் கேட்டுக்கொண்டது. அரசியல் கட்சியினர் வந்தால், அது ஏற்கனவே உள்ள அமைதியையும், இயல்பு நிலையையும் சீர் குலைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், எதிர்கட்சியினர் திட்டமிட்டபடி, இன்று காலை 12 மணியளவில் ஸ்ரீநகர் சென்றனர். இந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, திமுக எம்பி திருச்சி சிவா, பீகார் முன்னாள் முதல்வர் சரத் யாதவ் உள்ளிட்டோர் சென்றனர். இதனால், ஸ்ரீநகர் விமானநிலையத்தில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து எதிர்கட்சியினர் ஸ்ரீநகர் விமானத்தில் இறங்கியதும், காஷ்மீருக்குள் நுழைய அனுமதி இல்லை என்று கூறி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து அவர்களை வெளியே செல்ல விடமால் பார்த்து கொண்டனர்.

அரை மணி நேரம் படிச்சும் ஒன்னும் புரியல- காஷ்மீர் வழக்கில் தலையில் கொட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

இதனால் சுமார் 2 மணி நேரம் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அமர்ந்து இருந்தனர். இதையடுத்து ஸ்ரீநகரில் இருந்து மீண்டும் டெல்லிக்கு திரும்புகின்றனர். இது குறித்து கிடைத்த தகவல்களின்படி, காஷ்மீரில் தற்போது தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நேரத்தில் எதிர்கட்சிகள் அங்கு சென்றால், போராட்டம் நடத்துவதற்கோ அல்லது வன்முறைகள் ஏற்படுவதற்கோ வாய்ப்புகள் உள்ளது. எனவே, சட்டஒழுங்கை கருத்தில் கொண்டு எதிர்கட்சியினருக்கு காஷ்மீருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி