ஆப்நகரம்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: டோட்டலா மாறுது... இனிமே கம்மி தானாம்... ரயில் பயணிகள் ஏமாற்றம்!

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 12 பெட்டிகளுடன் பெரும்பாலான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் செய்யப்படும் மாற்றம் ரயில் பயணிகளுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 1 Jun 2023, 7:24 am
பிரதமர் மோடியே நேரில் வந்து ஒவ்வொரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் தொடங்கி வைத்து வருகிறார். வேறெந்த பிரதமரும் இந்த அளவிற்கு ஒரு ரயில் சேவைக்கு முக்கியத்துவம் அளித்திருக்க மாட்டார்கள். மோடியின் கனவு திட்டம் என்று அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், இதுவரை 18 சேவைகளை தொடங்கியுள்ளது. அடுத்தகட்டமாக 39 சேவைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
Samayam Tamil railway board orders chennai icf to manufacture only 8 coach vande bharat express
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: டோட்டலா மாறுது... இனிமே கம்மி தானாம்... ரயில் பயணிகள் ஏமாற்றம்!


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை

முதல் ரயில் 2019 பிப்ரவரி 15ஆம் தேதி அன்று நியூ டெல்லி - வாரணாசி இடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கடைசியாக மே 29, 2023 அன்று நியூ ஜல்பைகுரி - கவுகாத்தி இடையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்ததாக ஜூன் 3ஆம் தேதி மும்பை - மத்கோவன் இடையில் 19வது சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளது.

சென்னை டூ திருப்பதி ரயில்​

அதுமட்டுமின்றி சென்னை முதல் திருப்பதி வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை உள்நாட்டு தயாரிப்பு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், பயணிகளுக்கு சவுகரியம், உயர்தர சேவை எனப் பல்வேறு சிறப்புகளுக்கு உரியது. எஞ்சினே இல்லாத அதிவேக பயணத்தை அளித்து வருவது கூடுதல் சிறப்பு.​


வந்தே பாரத் vs சதாப்தி எக்ஸ்பிரஸ்: வேகம், வசதிகள், டிக்கெட் கட்டணம்... இரண்டில் எது சிறந்தது?

சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலை

இந்த பெட்டிகள் அனைத்தும் சென்னை ஐ.சி.எஃப்-பில் (Integral Coach Factory) தயாரிக்கப்படுகிறது. இவற்றை பராமரிப்பதற்கு குறைந்த செலவே ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் மோடி அரசின் இலக்காக இருக்கிறது. தற்போது பெரும்பாலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் பெட்டிகள் குறைப்பு

இந்நிலையில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 12 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் மட்டுமே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை ஐ.சி.எஃப் நிர்வாகத்திற்கு ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளது.

பயணிகள் பெரிதும் ஆர்வம்

முன்னதாக முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்டணம் அதிகமாக இருந்தாலும் பாதுகாப்பான சேவை என்பதால் பெட்டிகள் அதிகம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக கோடை விடுமுறையின் போது ரயில் டிக்கெட் முன்பதிவின் போது மக்களின் ஆர்வத்தை பார்க்க முடிந்தது.​


திருப்பதி தேவஸ்தானம் தேதி அறிவிப்பு... அடுத்த பிரம்மாண்டம் இங்க தானாம்... என்னென்ன சிறப்புகள்?

அடுத்து படுக்கை வசதிகள் கொண்ட ரயில்

இந்த சூழலில் பெட்டிகளின் எண்ணிக்கை 8ஆக குறைக்கப்படுவது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக பயணிகள் பலரும் கூறுகின்றனர். கூடிய விரைவில் படுக்கை வசதிகள் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாறு திட்டமிடப்படும் என ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி