ஆப்நகரம்

இரண்டு நாள் சிறப்பு பூஜைக்கு பின் மூடப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்!

திருவனந்தபுரம்: சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று இரவு மூடப்பட்டது.

Samayam Tamil 7 Nov 2018, 10:25 am
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் பாலராம வர்மா. இவரது பிறந்த நாளை ஒட்டி, நேற்று முன் தினம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Samayam Tamil Ayyappa


நேற்று சித்திரை ஆட்டத் திருநாளுக்காக பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இருப்பினும் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, சபரிமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சன்னிதான பாதுகாப்பிற்காக முதல்முறையாக பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற இரு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த நிகழ்வுகளை படம்பிடித்த ஒளிப்பதிவாளரும் தாக்கப்பட்டார். இதனால் ஐயப்பன் கோவில் வளாக மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை ஐயப்பனுக்கு படிபூஜை நடத்தப்பட்டது. பின்னர் அரிவராசனம் பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

இதற்கான நடவடிக்கையை மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். வரும் 17ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி