ஆப்நகரம்

National Herald: ராகுல், சோனியா மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு மீண்டும் விசாரணை - உச்சநீதிமன்றம் அனுமதி

நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

Samayam Tamil 4 Dec 2018, 4:20 pm
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல் மற்றும் சோனியா ஆகியோரின் யங் இந்தியன் நிறுவனம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
Samayam Tamil dmykacvxsaaeerijpg


காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டுக்கு ரூ.90.25 கோடி கடன் அளித்ததை காரணம் காட்டி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது.

இதனால் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்ததாக குற்றம்சாட்டி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனிடையே ராகுல், சோனியா ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறையின் விசாரணை தொடங்கியது. ‘2011-12ஆம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.68 லட்சம் என்று ராகுல் கணக்கு காட்டியுள்ளார். ஆனால் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் அவருக்கு அந்த ஆண்டு கிடைத்த வருவாய் ரூ.154 கோடி’ என்று வருமான வரித்துறை கூறியது.

2011-12ஆம் நிதியாண்டின் வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறைக்கு எதிராக ராகுல் மற்றும் சோனியா தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் விசாரித்து உரிய உத்தரவு வழங்கப்படும் எனவும் வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி