ஆப்நகரம்

கொரோனா ஊரடங்கு... அடங்காத உச்ச நீதிமன்றம்... இவ்வளவு வழக்குகளுக்கு தீர்ப்பா?

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் காணொளிக் காட்சி வாயிலாக 593 வழக்குகளை உச்ச நீதிமன்ற அமர்வுகள் விசாரித்துள்ளன.

Samayam Tamil 27 Apr 2020, 2:35 pm
கொரோனா வைரஸ் கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3அம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி வரையில் உச்ச நீதிமன்றம் 593 வழக்குகளை விசாரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 215 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எல்லா வழக்குகளுமே காணொளிக் காட்சி வாயிலாக விசாரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கொரோனா ஊரடங்கில் இவ்வளவு வழக்குகளுக்கு தீர்ப்பா?


இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதியன்று நாடு தழுவிய ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பாகவே மார்ச் 23ஆம் தேதி முதல் நீதிமன்றத்திற்குள் நுழைய வழக்கறிஞர்களுக்கும், மனுதாரர்களுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. எனினும், ஊரடங்கு காலத்தில் காணொளிக் காட்சி மூலமாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சாதாரண காலத்தில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3,500 வழக்குகளுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். தற்போது ஊரடங்கு காலத்தில் காணொளிக் காட்சி வாயிலாக அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க மூன்று அமர்வுகள் மட்டும் இயங்கி வருகின்றன. சாதாரண நாட்களில் 16 அமர்வுகள் வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நாட்களில் மொத்தம் 87 அமர்வுகள் 593 வழக்குகளை விசாரித்துள்ளன. முக்கியமான வழக்குகள், அவசர வழக்குகள் மட்டுமே காணொளிக் காட்சி வாயிலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை கூறுகிறது.

மொத்தம் 84 மறு விசாரணை மனுக்களுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 87 அமர்வுகளில் 34 அமர்வுகள் முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளன. மீதமுள்ள 53 அமர்வுகளில் மறு விசாரணை மனுக்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 390 முக்கிய வழக்குகளும், 230 தொடர்புடைய வழக்குகளும் விசாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 215 வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 174 தொடர்புடைய வழக்குகளாகும்.

வழக்கறிஞர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் இண்டர்நெட் வசதியில் சில நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டதால் காணொளிக் காட்சி விசாரணையின்போது சில சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், விசாரணையில் ஈடுபடும் நீதிபதிகளின் வீடுகளில் அதிவேக இண்டர்நெட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி