ஆப்நகரம்

24 மணி நேரம் தான் டைம்; என்ன சொல்றீங்க?- கமல்நாத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் கெடு!

காங்கிரஸ் ஆட்சி கவிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கமல்நாத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் 24 மணி நேர கெடு விதித்துள்ளது.

Samayam Tamil 17 Mar 2020, 1:54 pm
மத்தியப் பிரதேச மாநிலத்தை ஆட்சி செய்து வரும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்து 22 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையொட்டி நேற்று கூடிய ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அவையை வரும் 26ஆம் தேதி சபாநாயகர் ஒத்திவைத்தார்.
Samayam Tamil உச்ச நீதிமன்றம்


இதன் காரணமாக முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். உடனே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனை நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அவசர வழக்காக விசாரித்தது.

அப்போது நாளை காலை 10.30 மணிக்குள் கமல்நாத் அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையில் நீதிமன்றத்தில் ஆஜரான ராஜினாமா செய்துள்ள 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கமல்நாத் அரசு கூறுவது போல தாங்கள் எந்தவித அழுத்தத்திற்கு உட்பட்டும் ராஜினாமா செய்யவில்லை என்று பதிலளித்தனர்.

6 பேருக்கு மட்டும் ஓகே; அப்படினா நடக்குமா? இல்லையா? ம.பி. சட்டமன்றத்தில் உச்சக்கட்ட குழப்பம்!

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ கோவிந்த் சிங் ராஜ்புட், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை விவாதிப்பதற்கு முதலமைச்சர் கமல்நாத் 15 நிமிடங்கள் கூட அளிக்க மாட்டார். நாங்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை என்றார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். இதையொட்டி அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். அப்போது முதல் மத்தியப் பிரதேசத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுமா? எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்கப்படுமா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

அடுத்த செய்தி