ஆப்நகரம்

சமத்துவத்துக்கான போரட்டம் ஓயவில்லை: வன்கொடுமை சட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இரண்டு நீதிபதிகள் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது

Samayam Tamil 1 Oct 2019, 6:04 pm
டெல்லி: சமத்துவத்திற்கான தலித் மக்களின் போராட்டம் நாட்டில் இன்னும் ஓயவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தால் உடனடியாக கைது செய்வது கட்டாயமில்லை எனவும், முன் ஜாமீன் கிடையாது என்ற பிரிவை நீக்கியும் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த சட்டத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது, தவறாக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் அந்த தீர்ப்பை வழங்கியதாக நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனர்.

ஆனால், இந்த உத்தரவு வன்கொடுமை சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. எஸ்சி, எஸ்டி அமைப்புகள் பழங்குடி அமைப்புகள் சார்பில் இதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. அதன் விளைவாக மத்திய அரசு அந்தத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் ஒன்றையும் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவுகள் அந்த சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் என்பதால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், சமத்துவதுக்கான எஸ்சி/எஸ்டி சமுதாய மக்களின் போராட்டம் நாட்டில் இன்னும் ஓயவில்லை எனவும், தீண்டாமையையும், சமூக புறக்கணிப்பையும் அவர்கள் இன்றளவும் எதிர்கொண்டு வருவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா மற்றும் பி.ஆர்.கவேஆகியோர் அடங்கிய அமர்வு வேதனை தெரிவித்துள்ளது. எஸ்சி/எஸ்டி சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது, பொய் வழக்குகள் போடுவது உள்ளிட்டவைகள் மனித தவறுகளால் நடக்கிறது எனவும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

அடுத்த செய்தி