ஆப்நகரம்

கொரோனா மருத்துவமனை ஐசியூவில் பயங்கர தீ; பலர் பலியானதால் அதிர்ச்சி!

மருத்துவமனையில் நிகழ்ந்த தீவிபத்து பற்றி முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 27 Nov 2020, 7:52 am
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாவ்தி ஏரியாவில் உதய் சிவானந்த் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றது. இங்கு 33 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
Samayam Tamil Gujarat Hospital Fire


அப்போது அந்த அறையில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து மற்ற அறைகளுக்கும் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

ஆனால் அவசர சிகிச்சை அறையில் இருந்து 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் போக்குவரத்துக்கு தடை: மத்திய அரசு உத்தரவு!

இந்த சூழலில் உதய் சிவானந்த் மருத்துவமனையில் இருந்த அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டு வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் அகமதாபாத் நகரில் உள்ள 4 மாடிகள் கொண்ட தனியார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் 8 கொரோனா நோயாளிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி