ஆப்நகரம்

பழிவாங்கும் அரசின் அடுத்த குறி; ராகுல் சாடல்!

மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது

Samayam Tamil 27 Sep 2019, 4:19 pm
டெல்லி: பழிவாங்கும் நோக்குடன் சரத் பவார் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சாடியுள்ளார்.
Samayam Tamil rahul gandhi


மகாராஷ்டிர மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, அம்மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்திருந்த சரத் பவார், இன்று பிற்பகலில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் செல்ல முடிவெடுத்துள்ளார். விசாரனைக்கு ஆஜராக சரத் பவாருக்கு சம்மன் எதுவும் அனுப்பப்படாத நிலையில், அவரது முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மும்பையில் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

மேலும், அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அலுவலகமும் அமைந்துள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மும்பையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், பழிவாங்கும் நோக்குடன் சரத் பவார் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சாடியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பழிவாங்கும் அரசால் குறி வைக்கப்படும் சமீபத்திய எதிர்க்கட்சி தலைவர் சரத் பவார். மகாராஷ்டிர மாநிலத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, அரசியல் சந்தர்ப்பவாதம்” என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார் ஆகியோரை தொடர்ந்து, அக்கட்சியின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

அடுத்த செய்தி