ஆப்நகரம்

உயிரிழந்த ராணுவ வீரர் 7 ஆண்டிற்கு பின் வீடு திரும்பிய அதிசயம்

உத்தரகாண்ட் மாநில எல்லையில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ராணுவ வீரர் 7 ஆண்டுகளுக்கு பின் வீட்டிற்கு திரும்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 16 Jun 2016, 12:58 pm
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில எல்லையில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ராணுவ வீரர் 7 ஆண்டுகளுக்கு பின் வீட்டிற்கு திரும்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil soldier returns home after 7 years after his death
உயிரிழந்த ராணுவ வீரர் 7 ஆண்டிற்கு பின் வீடு திரும்பிய அதிசயம்


பாலிவுட்டிற்கு இதைவிட சிறந்த திரைக்கதை கிடைக்க வாய்ப்பில்லை என்று தான் கூற வேண்டும். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த பிடேடா கிராமத்தை சேர்ந்தவர் தரம்வீர் சிங். இவர் டேராடூனில் உள்ள 66வது ஆயுதப்படை ரெஜிமண்ட் பிரிவில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 2009ம் ஆண்டு, டேராடூன் அருகே உள்ள சக்ரதா சாலைக்கு சக வீரர்களுடன் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில், ராணுவ வீரர்கள் அனைவரும் மாயமானதாக கூறப்பட்டது. ஆனால் சிறிது நாட்களுக்கு பிறகு, விபத்தில் சிக்கிய வீரர்கள் தங்களது முகாமிற்கு திரும்பிய நிலையில், தரம்வீர் சிங் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

மூன்று ஆண்டுகளாகியும் தரம்வீர் சிங் குறித்த தகவல்கள் கிடைக்காததால், ராணுவத்தினர் அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம், தரம்வீர் சிங்கின் தந்தை தனது வீட்டின் கதவு நள்ளிரவில் தட்டப்பட்டதை அடுத்து, அதனை திறக்க சென்றார். அப்போது அவரது மகன் தரம்வீர் சிங் உயிருடன் நின்று கொண்டிருந்ததை கண்டு, இன்ப அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து தரம்வீர் சிங்கிடம் கேட்ட போது, கடந்த 2009ம் ஆண்டு நிகழ்ந்த விபத்திற்கு பிறகு தனக்கு எந்தவித நியாபகங்களும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு, ஹரித்வாரில் உள்ள தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.

அப்போது இருசக்கர வாகனம் தன் மீது மோதியதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனக்கு பழைய நியாபகங்கள் திரும்பியதாகவும் தரம்வீர் சிங் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய நபரிடம் ரூ.500 பணம் பெற்றுக் கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பிடேடா கிராமத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் கூறினார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன், விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் மீண்டும் உயிருடன் திரும்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தரம்வீர் சிங் மீண்டும் திரும்பியதை அடுத்து, அவரது குடும்பத்தினரும், பொதுமக்களும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி