ஆப்நகரம்

‘தாதா Vs தீதி’: மம்தாவுக்கு எதிராக கங்கூலியை வைத்து திட்டம் போடும் பாஜக!

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக முன்னாள் இந்திய அணி கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்கூலியை களம் இறக்க பாஜக திட்டமிடுவதாக அரசியல் அரங்கில் மீண்டும் சலசலக்கப்படுகிறது

Samayam Tamil 28 Dec 2020, 9:05 pm
பாஜகவுக்கு சிம்மசொப்பமனாக இருக்கும் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் அகற்றி விட்டு ஆட்சிக் கட்டிலில் அமருவது அக்கட்சியின் முக்கிய இலக்குகளில் ஒன்று. அதற்கு ஏற்றவகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அந்த வெற்றி அளித்த நம்பிக்கையில் அடுத்த ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்காக சற்று அதிகமாக உழைத்தால் ஆட்சியை கைபற்றி விடலாம் என்ற முனைப்பில் பல்வேறு அதிரடி வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. இதற்காக 11 பேர் கொண்ட மேலிடக் குழுவையும் பாஜக அமைத்துள்ளது.

மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. அவருடன் சேர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் பாஜக வசம் சென்றுள்ளனர்.

இதனிடையே, மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்கூலியை களம் இறக்க பாஜக திட்டமிடுவதாக அரசியல் அரங்கில் மீண்டும் சலசலக்கப்படுகிறது. இதேபோன்று கடந்த 2015ஆம் ஆண்டிலும் சவுரவ் கங்கூலி பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் பரவின. ஆனால், அந்த தகவலுக்கு அவர் அப்போது மறுப்பு தெரிவித்தார்.


இந்த நிலையில், மேற்குவங்க ஆளுநரை நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரம் கங்கூலி சந்தித்து பேசியது அரசியல் களத்தின் சூட்டை அதிகரித்துள்ளது. ஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்த சவுரவ் கங்கூலி, “கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜக்தீப் தன்கர், ஈடன் கார்டன் மைதானத்தை பார்வையிடவில்லை என்பதால் அந்த மைதானத்தையும் என்னையும் பார்க்க விரும்பினார். ஆனால், பயிற்சி ஆட்டம் நடைபெறுவதால் இன்று சாத்தியமில்லை என்று அவரிடம் கூறிய நான், ராஜ்பவனுக்கு நேரில் வந்து ஈடன் கார்டன் மைதானத்தை அடுத்தவாரம் பார்வையிட அழைத்தேன்” என்று விளக்கம் அளித்தார். அதேசமயம், வேறெந்த யூகங்களுக்கும் இடமில்லை என்றும் கங்கூலி தெரிவித்தார்.


அதன் தொடர்ச்சியாக, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் மறைந்த அமைச்சர் அருண் ஜெட்லியின் முழுஉருவ சிலையை இன்று திறந்து வைத்த அமித் ஷாவுடன், சவுரவ் கங்கூலியும் கலந்து கொண்டார். அதன்பின்னர், அங்கிருந்து புறப்பட்ட அவரிடம் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்காமலேயே அவர் சென்று விட்டார்.

நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

முன்னதாக, மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமித் ஷா, “மேற்குவங்கத்தின் அடுத்த முதல்வர் இந்த மண்ணின் மைந்தனாக இருப்பார்” என்று தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி