ஆப்நகரம்

போராட்டம், வன்முறை, கைது, குண்டுவீச்சு - கலவர பூமி கேரளாவின் தற்போதைய நிலவரம்!

கொச்சின்: சபரிமலை விவகாரத்தில் கேரள மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Samayam Tamil 5 Jan 2019, 11:24 am
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் தரிசனம் செய்தனர். இதனை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி செய்ததை அடுத்து, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் தங்களது எதிர்ப்பு வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பந்தளத்தில் ஏற்பட்ட வன்முறையில் வலதுசாரி ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
Samayam Tamil Kerala Violence


இதையடுத்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 801 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1369 போராட்டக்காரர்கள் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 717 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களால் பல்கலைக்கழக, பள்ளி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலப்புரம் தவலூரில், உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதேபோல், கொட்டாரக்கரையில், பாஜக - மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. நெடுமங்காடு காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார்.

போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறை காரணமாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவின் கண்ணூர் நகரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஷம்சீர் வீட்டின் மீது நேற்று இரவு 10.15 மணியளவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.

இதுகுறித்து பேசிய ஷம்சீர், வன்முறையை தூண்டிவிட ராஷ்டீரிய சுவயம்சேவக் சங்க அமைப்பினர் திட்டமிட்ட சதியிது. வன்முறையை உருவாக்கி அமைதியான சூழ்நிலையை ஒழிப்பதே அவர்கள் நோக்கம் என்றார். சில மணிநேரங்கள் கழித்து நடந்த பதில் தாக்குதலில், கண்ணூர் நகரில் உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் முரளிதரன் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

இதில் யாரும் காயமடையவில்லை. இதேபோல் தலச்சேரி பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.சசி வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீசி சென்றுள்ளனர். ஷம்சீர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில், போலீசார் 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி