ஆப்நகரம்

குடியுரிமை திருத்தச் சட்டம்: தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 16 Dec 2019, 4:24 pm
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளாதால் சட்டமாகியுள்ளது.

ஆனால், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாலும், பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவதாலும் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் போது வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன.

கலவரம் ஓய்ந்தால்தான் விசாரணை: தலைமை நீதிபதி போப்டே கண்டிப்பு

அசாம், திரிபுரா, மேகாலயா, மேற்குவங்கம் என இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். ஆனால், அமைதியாக போராடி வரும் தங்களுக்கு, வன்முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மாணவர்களுடன் நானும் இருக்கிறேன்: ஜாமியா துணைவேந்தர் நஜ்மா அக்தர்

இந்நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழக்கங்களை எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் சென்னை ஐ.ஐ.டி., மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, கோவையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த செய்தி