ஆப்நகரம்

அயோத்தி வழக்கில் இருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விதித்த அந்த மூன்று நிபந்தனைகள் !!

அயோத்தி வழக்கிலிருந்து வெளியேற, சன்னி வக்பு வாரியம் முக்கியமான மூன்றுநிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 16 Oct 2019, 11:34 pm
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராம ஜென்ம பூமி -பாபர் மசூதி விவகாரத்தில்
Samayam Tamil svb

தொடர்புடைய சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றன.

இதுதொடர்பான வழக்கில் மூன்று தரப்பினரும் நிலத்தை சமமாக பங்கிட்டு கொள்ள, கடந்த 2010 -ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 வழக்குகள் தொடரப்பட்டன.

இதற்கு தீர்வு காணும் வகையில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவை, கடந்த ஆண்ட உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதிலும் தீர்வு காணப்படாததால், நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6 -ஆம் தேதி முதல் தினமும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. சுமார் 40 நாட்கள் 180 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில் வாதங்களை இன்றுடன் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

அயோத்தி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதன்படி, வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் முடிக்கப்பட்டன. இதையடுத்து தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, தாங்கள் விதிக்கும் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால், வழக்கிலிருந்து வெளியேறுவதாக சன்னி வக்பு வாரியம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, மாநிலம் முழுவதும் பாழடைந்த நிலையில் உள்ள 22 மசூதிகளை புனரமைக்க உத்தரப் பிரதேச மாநில அரசு ஒப்புக்கொள்ள வேண்டும், 1991 -ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்த முஸ்லீம்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற மூன்று நிபந்தனைகளை வக்பு வாரியம் முன்வைத்தது.

இன்றுடன் விசாரணை நிறைவு; அடுத்த கட்டத்திற்கு நகரும் அயோத்தி வழக்கு- உச்ச நீதிமன்றம்!

இதே கோரிக்கையை, சமரச தீர்வு குழுவிடம் இந்த வாரியம் தெரிவித்துள்ளதா? அவ்வாறு தெரிவிக்காதபட்சத்தில், நீண்ட காலமாக நடைபெற்று வரும் இவ்வழக்கில், இறுதிகட்ட வாதத்தின்போது, திடீரென இப்படியான அதிரடி கோரிக்கைகளை முன்வைப்பதை நீதிமன்றம் எப்படி பார்க்கும்? இக்கோரிக்கைகளை அரசு தரப்பு ஏற்றுக்கொள்ளுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு, இவ்வழக்கின் தீர்ப்பின்போது விடை கிடைத்துவிடும்.

அடுத்த செய்தி