ஆப்நகரம்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 17 Jan 2020, 8:43 pm
டெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், உடனடியாக இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த இரண்டு விவகாரங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.8,754.23 கோடியும், பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு: என்னவெல்லாம் கேட்பார்கள்?

தொடர்ந்து, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பாணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் விவேக் ஜோஷி வெளியிட்டுள்ளார். கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 31 கேள்விகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நடப்பாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அதில் பெறப்பட்ட விவரங்கள் 2021ஆம் ஆண்டு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 ஆயிரம் ‘புரூ’ அகதிகளுக்கு திரிபுராவில் நிரந்தரக் குடியுரிமை

அதேசமயம், பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து பல்வேறு நபர்கள், அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

அடுத்த செய்தி