ஆப்நகரம்

நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உச்சநீதிமன்றம் தடை!

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Samayam Tamil 20 Jul 2018, 1:17 pm
நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Samayam Tamil supreme court


மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது. இதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 மதிப்பெண்கள், வீதம் 196 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைநிறுத்தி வைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அகில இந்திய அளவில் மருத்துவப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 16ம் தேதி தனியார் கல்லூரிகளில் நடைபெறவிருந்த கலந்தாய்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் கலந்தாய்வு நடக்காது என்றும் புதிதாக தரவரிசைப்பட்டியலை தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, நீட் தேர்வு வினாத்தாளில் கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது. தமிழக அரசு பரிந்துரைத்த மொழிப்பெயர்ப்பாளர்கள் தான், இந்தி ஆங்கில கேள்விகளை தவறாக மொழி பெயர்த்துள்ளனர் என்று மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.


இதனையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் மற்றும் எம்பிபிஎஸ் கலந்தாய்வு குறித்து சிபிஎஸ்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ தொடர்ந்தமேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

அடுத்த செய்தி