ஆப்நகரம்

பிரசாந்த் பூஷனுக்கு என்ன தண்டனை? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விவரம் இதோ!

நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதியின் செயல்பாடுகளை விமர்சித்த வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது.

Samayam Tamil 31 Aug 2020, 8:33 am
சமூக அவலங்கள் குறித்து தனது கருத்துகளை காட்டமாக முன்வைக்கக் கூடியவர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். அதேசமயம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமின்றி அரசியல் ரீதியாக கருத்துகளையும் தெரிவிப்பார். இவரது சமீபத்திய பேச்சும், சமூக வலைத்தளப் பதிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ்.ஏ.பாப்டே. இவர் இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படத்தை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், நாக்பூரில் உள்ள ராஜ் பவனில் பாஜக தலைவருக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓட்டுகிறார்.
Samayam Tamil Prashant Bhushan


அப்போது முகக்கவசமோ, ஹெல்மெட்டோ அணியவில்லை. குடிமக்கள் தங்கள் அடிப்படை உரிமையை பெற மறுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் லாக்டவுன் செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் சரிவரக் கையாளவில்லை என்று சரமாரியாக குற்றம்சாட்டியிருந்தார்.

சிறை செல்வாரா வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்; சிக்க வைத்த வழக்கின் பின்னணி என்ன?

இவ்வாறு நீதித்துறை மீதும், தலைமை நீதிபதி மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதும் பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இதன் விசாரணையில் நீதிபதி வண்டி ஓட்டினார் என்று நினைத்து தான் கருத்து தெரிவித்தேன். ஆனால் அது நின்று கொண்டிருந்த வாகனம் என்று பின்னர் தெரியவந்தது.

எனவே ட்விட்டின் அந்தப் பகுதிக்கு மட்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம் விசாரணையின் முடிவில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று கடந்த 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. இருப்பினும் நீதித்துறையை விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்டால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால், மன்னிப்பு கேட்பது என் மனசாட்சியையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பு செய்வதாக இருக்கும். எனவே மன்னிப்பு கேட்கப் போவதில்லை. நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்கத் தயார் என்று பிரசாந்த் பூஷன் அதிரடியாக தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிடுகையில், பிரசாந்த் பூஷனை இந்த முறை மன்னித்து விடலாம். தண்டனை தேவையில்லை என்று கூறினார்.

மன்னிப்பு கேட்க முடியாது, தண்டனையைச் சொல்லுங்க - நீதிமன்றத்தை அதிரவைத்த பிரசாந்த் பூஷன்!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண் மிஸ்ரா, மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல் இருக்கிறது. இந்த வார்த்தையைக் கூறுவதால் நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடுமா? மன்னிப்பு என்ற வார்த்தை பல்வேறு காயங்களை ஆற்றக்கூடியது. இதனை அவமானமாக கருத வேண்டாம் என்று நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்தார். இதற்காக பிரசாந்த் பூஷனுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.

ஆனால் அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு என்ன தண்டனை என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைப் பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். இல்லையெனில் இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படலாம்.

அடுத்த செய்தி