ஆப்நகரம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பிக்களுக்கு ஹேப்பி நியூஸ் - சபாநாயகர் அதிரடி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து எம்.பிக்கள் சஸ்பெண்ட் திரும்ப பெறப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2020, 1:56 pm
நாடாளுமன்றத்தில் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
Samayam Tamil Lok Sabha


ஒரு கட்டத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கையை எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது மேஜையில் இருந்த காகிதங்களை எடுத்து கிழித்து வீசியெறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்தார். அவர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க இயலாது என்று உத்தரவிட்டார்.

அதில், கவுரவ் கோகாய், பிரதாபன், தீன் குரியகோஸ், உன்னிதன், மாணிக்கம் தாகூர், பென்னி பெஹ்னன், குர்ஜீத் அவுஜ்லா ஆகியோர் அடங்குவர். இரு அவைகளிலும் நடைபெற்று வரும் தொடர் அமளியால் எந்தவித மசோதாக்களையும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹேய் மோடி கச்சா எண்ணெய் விலை சரிவை கவனிக்கவில்லையா: ராகுல் ட்வீட்

தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்படுவதன் மூலம் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும். மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாது சூழல் ஏற்படும். இந்நிலையில் இன்று மக்களவை கூடியதும் எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, 7 எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இவர்கள் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இனி பங்கேற்க முடியும்.

அடுத்த செய்தி