ஆப்நகரம்

காசி தமிழ் சங்கமம்: தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் முழு ஆதரவு!

காசி தமிழ் சங்கமம் முயற்சிக்கு தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் முழு ஆதரவு அளிப்பர் என கலைமாமணி இளங்கோவன் உறுதி அளித்துள்ளார்

Authored bySM Prabu | Samayam Tamil 27 Nov 2022, 2:07 pm
பாரத தேசம் கலைகளின் சுரங்கம், பொக்கிஷம் என்றும் இவற்றைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், பிரபலப்படுத்தவும் மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் முழுமையான ஆதரவை அளிப்பார்கள் என்றும் 'கலைமாமணி' இளங்கோவன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
Samayam Tamil காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம்


காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக் கலைஞர்களுடன் பங்கேற்றுள்ள இளங்கோவன், பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அளித்த பேட்டியில், பாரத தேசம் கலைகளின் பொக்கிஷம் என்பதால்தான் அளவிட முடியாத கலாச்சார பாரம்பரியம் என்ற வகையில் இந்தியாவின் பல கலைகளைப் பாதுகாக்க யுனஸ்கோ முயற்சி செய்து வருகிறது என்றார். அது போன்றே தற்போது வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் முயற்சியும் உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் - அருமையான திருவிழாவில் - தமிழ்நாட்டின் நிகழ்த்துக்கலைகள் இடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; பெருமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது முன்னோர்களின் பாரம்பரிய சொத்தான கலைகளை மீட்டெடுக்கவும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் தம்மாலான முயற்சிகளைக் கடந்த 35 ஆண்டுகளாக செய்து வருவதாக கலைமாமணி இளங்கோவன் கூறினார்.

தமிழில் பொதுவாக கலைகளை இயல் இசை நாடகம் என்று கூறினாலும் நடனக் கலையை இரண்டு வகையாகக் காணலாம். ஒன்று செவ்வியல் நடனம்; மற்றொன்று நாட்டுப்புற நடனம் என்றுஅவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இந்த வகையில் நூற்றுக்கும் அதிகமான நடனங்கள் இருந்தன. இவற்றில் பல அழிந்து விட்டன. இவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசுத் துறைகள் ஈடுபடுகின்றன என்பதை கலைமாமணி இளங்கோவன் நினைவுகூர்ந்தார்.

குஜராத்தில் 5 ரூபாய்க்கு உணவு.. 'அன்னபூர்ணா கேன்டீன்'... பாஜக தேர்தல் வாக்குறுதி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ளும் காசி தமிழ் சங்கமம் முயற்சிகளுக்கு கலைஞர்கள் ஆகிய நாங்கள் முழு ஆதரவை அளிப்பது எங்களின் கடமையாக நினைக்கிறோம் என்றும், இதற்கு இன்னும் கூடுதலான ஆதரவைத் தரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கலைமாமணி இளங்கோவன் உறுதிபட தெரிவித்தார்.

தமிழகத்துக்கும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கும் (காசி) இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வாரணாசியில் ஒரு மாத காலம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒருமாத காலம் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த சங்கமத்தில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் வாரணாசி சென்றுள்ளனர்.

வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே காசி தமிழ் சங்கமத்தின் நோக்கம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி