ஆப்நகரம்

விருந்து சாப்பிட்ட 5 பேர் மரணம்: விஷம் வைத்த பெண் கைது!

மகாராஷ்டிரா மாநிலத்தில், விருந்து நிகழ்ச்சியின் போது உணவு சாப்பிட்டு 5 பேர் பலியானதற்கு காரணமான, பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 23 Jun 2018, 12:37 pm
மகாராஷ்டிரா மாநிலத்தில், விருந்து நிகழ்ச்சியின் போது உணவு சாப்பிட்டு 5 பேர் பலியானதற்கு காரணமான, பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil america
விருந்து சாப்பிட்ட 5 பேர் மரணம்: விஷம் வைத்த பெண் கைது!


மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தில் கடந்த 18-ம் தேதி, சுபாஷ் மானே, என்பவரின்வீட்டு கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இதில் விருந்து சாப்பிட்ட 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 120 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் விருந்தின் போது பரிமாறப்பட்ட உணவில், பாம்புகள் வருவதைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் விஷம் இருப்பது கண்டுபிடிக்க்ப்பட்டது. இதனையடுத்து வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள் யாராவது உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் ஜோதி பிரத்னியா (வயது 23) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், விருந்து சாப்பாட்டில் விஷம் கலந்ததை அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.


கோபோலியைச் சேர்ந்த சுபாஷ் மானேவின் நெருங்கிய உறவினரான பிரத்னியாவுக்கு, கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே பிரத்னியா கருப்பாக இருப்பதாகவும், அவரால் வீட்டுக்கு தரித்திரம் ஏற்பட்டு விட்டதாகவும், அவரது மாமனார் குடும்பத்து உறவினர்கள் அடிக்கடி விமர்சித்துள்ளனர். சுபாஷ் மானேவும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளதாக தெரிகிறது

இதனையடுத்து, தனது குடும்பத்தார் மீதும், சுபாஷ் மானே மீதும் கடும் கோபத்தில் இருந்த பிரத்னியா, அவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். அப்போதுதான் சுபாஷ் மானே வீட்டின் கிரகப் பிரவேச நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற விருந்தின்போது பறிமாறப்பட்ட குழம்பில் பூச்சி மருந்தை கலந்து, பிரத்னியா அதை தனது கையால் பரிமாறவும் செய்துள்ளார்.

விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து பிரத்னியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காலாப்பூர் போலீசார் தெரிவித்தனர்.

தன்னை கருப்பாக இருப்பதாக விமர்சித்ததால், குடும்பத்தையே பெண் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி